ஸ்மார்ட்ஃபோன்களின் செயல் திறனை அளவிட்டு ரேட்டிங் வழங்கும் பணியை சில நிறுவனங்கள் செய்து வருகின்றன. ரேட்டிங் அதிகமாக பெறும் ஸ்மார்ட்ஃபோன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றன.
அப்படி நல்ல ரேட்டிங் பெறுவதற்காக, செயற்கையாக மென்பொருள் ஒன்றின் மூலம் ஹுவாய் நிறுவனம், செயல் திறனை அதிகரித்துக் காட்டியதாக 3டி மார்க் நிறுவனம் கண்டறிந்தது. மேலும், பி20,பி20 ப்ரோ, நோவா3 ஆகிய மொபைல்களை தனது ரேட்டிங் பட்டியலில் இருந்தும் நீக்கியது.
ஆனந்த் டெக் என்ற நிறுவனம், ஹூவாய் ஸ்மார்ட்ஃபோன்களில் உள்ள மென் பொருளால் செயல் திறன் அதிகரிக்கப்படுவதை கண்டுபிடித்தது. இதனை அடுத்து, ஹூவாய் நிறுவனம் மீது விமர்சனங்கள் எழுந்தன.
குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஹுவாய் நிறுவனம் “ செயற்கை நுண்ணறிவு மூலம், மொபைலின் திறனை முழுமையாக பயன்படுத்தவே இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எந்த அளவுக்கு திறனை வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை உண்டு. ஆகையால், ‘Performance Mode’-ஐ, வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு கொடுக்க இருக்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.