ரிலையன்ஸ் ஜியோ நிறுனவம், ஜியோ ஃபைபர் என்கின்ற தனது பிராட்பேண்டு சேவையை சீக்கிரமே சந்தையில் களமிறக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிராட்பேண்டு 100 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட இணைய சேவையை பயனர்பகளுக்கு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், ஜியோ ஃபைபர் சேவையை இந்தியாவின் முக்கிய நகரங்களில் சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் சீக்கிரமே இந்த சேவையை பொது மக்கள் பயன்பாட்டுக்கு ஜியோ நிறுவனம் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பிராட்பேண்டு சேவைக்கு ஒரு மாதத்துக்கு 1000 ரூபாய்க்குக் கீழே ஜியோ நிறுவனம் விலை நிர்ணயம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த பிராட்பேண்டு மூலம், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் வசதியையும் பயனர்கள் பெற முடியும்.
ஏர்டெல் நிறுவனம், 300 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட பிராட்பேண்டு சேவையை கடந்த மாதம் ஆரம்பித்தது. இதற்கு மாதாந்திர கட்டணம் 2,199 ரூபாய் ஆகும். இந்நிலையில், ஜியோ நிறுவனமும் ஏர்டெல்-க்கு போட்டியாக சேவையை அறிமுகம் செய்யும் என்று யூகிக்கப்படுகிறது.
ஜியோ ஃபைபர், அகமதாபாத், சென்னை, ஜாம்நகர், மும்பை மற்றும் புது டெல்லியில் கடந்த இரண்டு வருடங்களாக சோதனை ஓட்டங்கள் செய்து வருகின்றது. இந்த சோதனை ஓட்டங்களில் இலக்கு வைத்த அனைத்தும் முடிந்துள்ளதாகவும், அதனால் பொதுப் பயன்பாட்டுக்கு பிராட்பேண்டு சேவையை அளிக்கும் முடிவை ஜியோ எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
ஜியோ நிறுவன சிம் கார்டை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 18.6 கோடியாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உள்ள நிலவரம் இது. சென்ற ஆண்டின் கடைசி காலாண்டு முடிவடையும் போது இந்த எண்ணிக்கை 16 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.