பிராங் ஷோவுக்கு வீடியோ எடுக்கவும், அதனை தொலைக்காட்சிகளில் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டனர்
பிரபல சீன வீடியோ செயலியான டிக் டாக்கை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், டிக் டாக் செயலி 'ஆபாசத்தை ஊக்குவிக்கிறது' என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல், பிராங்க் ஷோவுக்கு வீடியோ எடுக்கவும், அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும். இந்த செயலியை இளைஞர்கள் மற்றுமின்றி சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்படி அளவுக்கு அதிகமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் இந்த செயலியை பல இளைஞர்கள் தவறான வகையில் உபயோகிக்கிறார்கள். அதன் விளைவாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும்" எனறு கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, டிக் டாக் செயலியைத் தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கறிஞர் முத்துக்குமார் தரப்பில், "பிராங்க் ஷோ வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகையால் அதற்கும் தடை விதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், பிராங் ஷோவுக்கு வீடியோ எடுக்கவும், அதனை தொலைக்காட்சிகளில் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதுதொடர்பாக டிக் டாக் நிறுவனத்தின் செய்திம் தொடர்பாளர் கூறும்போது, நாங்கள் உள்ளூர் சட்ட விதிகளை மதிக்கிறோம். நீதிமன்ற உத்தரவின்படி தேவையான நடவடிக்கையை எடுப்போம் என்றும் நீதிமன்ற உத்தரவின் நகலுக்காக காத்திருக்கிறோம் என்றும் கூறினார்.
மேலும், பாதுகாப்பான மற்றும் நேர்மறை பயன்பாட்டு சூழலைப் பராமரிப்பதற்கே நாங்கள் முன்னுரிமை வழங்குவோம் என்று அவர் கூறியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.