பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாநில முதல்வர்களுடன் சுமார் 6 மணி நேரம் கலந்துரையாடினார்.
கொரோனா பரவலை அடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் 30 ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை அடுத்து, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆரோக்ய சேது செயலியை, ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் கட்டாயம் தரவிறக்கம் செய்ய வேண்டும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆரோக்ய சேதுவை தரவிறக்கம் செய்வது பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது அது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, 30 சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து வெளியிடப்பட்ட விதிமுறைகளில், ஆரோக்ய சேது கட்டாயம் என்று சொல்லப்படவில்லை. ஆனால், நேற்றிரவு ரயில்வே துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்திய ரயில்வே துறை, சில பயணிகள் ரயில்களை இயக்க ஆரம்பிக்க உள்ளது. ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் ஆரோக்ய சேது செயலியை தங்கள் மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்வது கட்டாயமாகும். பயணத்துக்கு முன்னர் அவர்கள் இதை செய்திருக்க வேண்டும்,” என்று ட்வீட்டில் தகவல் தெரிவித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாநில முதல்வர்களுடன் சுமார் 6 மணி நேரம் கலந்துரையாடினார். கொரோனா வைரஸை எதிர்கொள்வது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பேசப்பட்டது. அந்த சந்திப்பைத் தொடர்ந்துதான் மத்திய அரசு, ஆரோக்ய சேது குறித்த அறிவப்பை வெளியிட்டுள்ளது.
ஒருவேளை பயணிகள் ஆரோக் சேது செயலியை தரவிறக்கம் செய்யாமல் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டால், அங்கு வைத்தே அவர்களின் மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்யப் பணிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
முன்னதாக உச்ச நீதிமன்றம், ஆரோக்ய சேது செயலியை மக்கள் தங்கள் போன்களில் தரவிறக்கம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் எந்த விதிமுறைகளின் கீழ் ஆரோக்ய சேது தரவிறக்கம் கட்டாயமாக்கப்படும் என்பதில் தெளிவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.