குழந்தைகளை கண்காணிக்கும் மற்றும் வளர்த்தலுக்கான தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன என்று சில அறிக்கைகள் கூறுகின்றன
Photo Credit: Pampers
குழந்தைகளுக்குப் போடப்படும் டயப்பரில் ‘ஸ்மார்ட்' தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளது பேம்பர்ஸ் நிறுவனம். ‘கனெக்டட் கேர் சிஸ்டம்' என்கிற வசதி மூலம், குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்கும் சென்சாரை டயப்பரில் பொருத்தியுள்ளது பேம்பர்ஸ். ‘லுமி' என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் மூலம் குழந்தைகளை சுலபமாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
டயப்பர் ஈரமாகும்போது, அது குறித்து ஆப் ஒன்றுக்கு தகவல் அனுப்பிவிடும் பொருத்தப்பட்டுள்ள சென்சார். மேலும் குழந்தை எவ்வளவு நேரம் தூங்குகிறது, டயப்பர் அசுத்தமாக இருக்கிறதா, எப்போது உணவு கொடுக்க வேண்டும் போன்ற தகவல்களையும் இந்த ‘ஸ்மார்ட் டயப்பர்' தெரிவித்துவிடுமாம். இந்த டயப்பரின் விலை குறித்து பேம்பர்ஸ் இதுவரை எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. அமெரிக்காவில் சீக்கிரமே இது வெளியிடப்பட உள்ளது.
குழந்தைகளை கண்காணிக்கும் மற்றும் வளர்த்தலுக்கான தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்த துறையானது 2.5 பில்லியன் டாலர் மதிப்புக்கு வளர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமி வளர்ப்பில் ‘ஸ்மார்ட் தொழில்நுட்பம்' அதிகமாக வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அது எந்த அளவுக்கு நல்லது என்பது குறித்து பெற்றோர்களும் முடிவெடுக்க வேண்டும். எதை அனுமதிக்கலாம், எதை அனுமதிக்கக் கூடாது என்கிற முடிவு முக்கியமானதாக இருக்கும்.
‘How to Raise an Adult' என்கிற புத்தகத்தின் எழுத்தாளரான லித்காட்-ஹெய்ம்ஸ், “குழந்தையாக இருந்தாலும், அதற்கும் தனிப்பட்ட வாழ்த்தை, சுதந்திரம் என்பது அவசியம். முதலில் குழந்தையாக இருக்கும்போது அவர்களை கண்காணிப்போம். பிறகு பதின் பருவத்திலும் அவர்களை கண்காணிப்போம். பிறப்பு முதல் இறப்பு வரை இது நிற்காது” என்கிறார்.
குழந்தைகளை, இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பம் கொண்டு வளர்ப்பதன் மூலம், சிறு வயதிலிருந்தே அவர்களின் நடவடிக்கைகள் குறித்து தரவுகளை பெரிய டெக்-கார்ப்பரேட்கள் பெற முடியும். இதன் மூலம் அவர்களை வாழ்க்கை முழுவதுக்கும் பின் தொடரவும் முடியும்.
குழந்தைகள் குறித்து எடுக்கப்படும் தரவுகள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது என்ற தெளிவு இல்லை. குழந்தைகளை கண்காணிக்கும் பாதுகாப்பு கேமரா உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். பல நேரங்களில் அந்த வீடியோ காட்சிகள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆனால் பேம்பர்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், மேண்டி ட்ரீபி, “நிதித் துறையில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டயப்பர்களுக்கும் பொருந்தும். இந்த புதிய கண்டுபிடிப்பின் நோக்கம் என்பது, பெற்றோர்களின் அழுத்தத்தைக் குறைப்பதுதான். இதுவரை எங்களுக்கு இது குறித்து நேர்மறையான பின்னூட்டமே வந்துள்ளது” என்று கூறுகிறார்.
© The Washington Post 2019